ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி
ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களைத் தடுக்க பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், இளைஞர்களை சமூகப் பொறுப்புணர்வுடன் வழிநடத்துதல், பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துதல், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் போன்ற பல முக்கிய விடயங்களும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
ஆலங்குடாவை பாதுகாப்பான, அமைதியான மற்றும் ஒற்றுமை நிறைந்த கிராமமாக மாற்றும் நோக்கில் சிவில் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்து பொதுமக்களுடன் இணைந்து செயற்பட உறுதியளித்தது.
தகவல்:-ஆலஙகுடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்
முர்சித்
– AKMEDIA NEWS

Comments
Post a Comment